Tuesday 18 October 2016

குடிகாரர்களின் கவனத்திற்கு....


கீழே உள்ள படங்கள் கடந்த மே மாதத்தில் நான் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் செல்லும் சாலையில் உள்ள காமராஜர் அணையில் எடுத்தது. எவ்வளவு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா? உங்களால் தான் இந்ந நீர்நிலை எவ்வளவு மாசுபட்டுள்ளது தெரியுமா? ஒருபுறம் இதில் கலக்கும் ரசாயன கழிவுகள் மறுபுறம் குடிகாரர்களின் பாட்டில்கள், திண்பண்ட நெகிழிக் குப்பைகள். கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீர்களா?

இந்த அணையின் அழகை ரசிக்கத்தானே வருகின்றீர்கள்? அதன் அழகு பாதுகாக்கப்படவேண்டாமா? உங்கள் பிள்ளைகள் அதனை ரசிக்க வேண்டாமா? உங்கள் இழிவான செயல்களுக்கு பின் அதனால் ஏற்படும் கேடுகளை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?




ஒரு காலத்தில் இதில் விளையாடி இருக்கின்றோம் நாங்கள். இன்று நீரில் கை வைக்க முடிகிறதா? நாற்றமடிக்கிறது நீரில்...
                                                     
சரி கரையில் நடக்கத்தான் முடிகிறதா? கரையெங்கும் பாட்டில்களை உடைத்துப் போட்டிருக்கின்றீர்கள். உங்கள் வீடுகளில் இப்படித்தான் குடித்தபின் பாட்டில்களை உடைத்துப் போடுவீர்களா? நீங்கள் உடைத்துப் போட்டுச் சென்ற பாட்டில் சில்களால் எத்தனை குழந்தைகள் காயம்பட்டுள்ளன தெரியுமா? எத்தனை விலங்கள் அதில் பாதிக்கப்பட்டிருக்கும். அறிவுள்ளவன் இந்த இழிச் செயலை செய்வானா? ஒரு நாட்டை நேசிப்பது என்பது ஜனகனமன பாடுவதும், கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தால் பட்டாசு வெடிப்பதும் தான் என்று எண்ணியே வளர்ந்து வரும் பார்த்தீனியச் செடிகள் நீங்கள். அதுவல்ல இந்த மண்ணைப் பாதுகாப்பதும், இங்குள்ள மலைகள், மரங்கள், நதிகள், நிர்நிலைகள் உள்ளிட்ட யாவற்றையும் பாதுகாப்பதும் மக்களின் மீது அன்பு செலுத்துவதும் தான் உண்மையாக நாட்டை நேசிப்பது என்பது. அதுவும் சமீபகாலமாக இந்த செயல் இளைஞர்களிடத்தில் பெருகி வருகிறது.

                                                       குப்பைக் கழிவுகள், மது பாட்டில்கள்
நாலு பேர் சேர்ந்துவிட்டால் பாட்டில் வாங்கிக் கொண்டு ஊட்டிக்கு வருவது குடித்துவிட்டு குப்பையை வீசிவிட்டு செல்வது, பாட்டில்களை உடைத்துப் போடுவது அடேய் நீங்கள் வருவது குப்பைத் தொட்டியின் பக்கம் அல்ல மலைகளின் அரசியின் பக்கம்! இனிமேலாவது பாட்டில்களோடும், நெகிழிகளோடும் நெருங்காதீர்கள் நீலகிரியின் பக்கம் மட்டுமல்ல எந்த சுற்றுலா இடங்களுக்கும் தான்!

#Ban_plastics #Ban_liquor

Thursday 11 August 2016

தேன் பழம் - சிங்கப்பூர் செர்ரி (Muntingia calabura)

தேன் பழம் அல்லது நெய் பழம் என்று அழைக்கப்படுகின்ற இந்தப்பழம் செர்ரிப் பழ வகையைச் சார்ந்தது.

இது சிங்கப்பூர் செர்ரி, ஜமைக்கா செர்ரி, பனாமா செர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. மர வகையைச் சார்ந்த இந்த தாவரத்தின் தாவரவியல் பெயர் முட்டிங்கியா காலபுரா (Muntingia calabura) . Bird's cherry என்றும் அழைக்கப்படுகிறது.


    Muntingia calabura தேன் பழம் 


இதில் விட்டமின் சி, பி மற்றும் தாதுக்கள் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துக்களும் அடங்கியுள்ளது.

தலைவலி, சளி, ப்ளு காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது. மேலும் குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றையும் குணப்படுத்தவல்லது. இதன் இலைகளை தேநீராக சில மேலை நாடுகளில் அருந்துகின்றனர்.

 
Muntingia calabura தேன் பழ காய் 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்லெட்டிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த உற்சாகத்தையும், சக்தியையும் அளிக்கவல்லது.
                                                                                                                   - மலைநாடன் ஆசாத்